
பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள், அவர்களிடத்தில் உள்ள திறன்களை வலுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது!
சிக்கலுக்குத் தீர்வு காண்பது, பொறுப்பெடுத்துக் கொள்வது, முடிவெடுப்பது உள்ளிட்ட மேலும் சில திறன்களும் வேலை சந்தையில் தேவைப்படுகிறது என, மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் கூறியிருக்கிறது.
வேலையிடத்தில் நிகழ்பவற்றை உடனுக்குடன் சீர்த்தூக்கிப் பார்த்து, நிலைமைக்கு ஏற்ற முடிவெடுக்கும் ஆற்றல் பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டும் என, MEF கருதுகிறது.
கல்விக் கூடம் வேறு வேலையிடம் வேறு என்பதை புரிந்துக் கொண்டு, நம்பகமான முறையில் நடந்துக் கொள்வதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
------
சுகாதாரம் சார்ந்த விளம்பரங்கள் தொடர்பான எல்லா புகார்களும், மேல் நடவடிக்கைக்காக தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் அனுப்பப்படும்!
தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட விளம்பரங்களும் அதிலடங்கும் என, தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும், வல்லுனர்களுடனும் நடத்தப்பட்ட அண்மைய் கலந்துரையாடலில், இதன் தொடர்பிலும் கலந்து பேசப்பட்டதாக அவ்வமைச்சு கூறியது.
------
கிளாந்தானில் பெண்களிடையே உயர்ந்து வரும் போதை பழக்கத்திற்கு, அவர்களின் ஆண் துணைகளின் தூண்டுதலே முதன்மை காரணமாக அமைகிறது!
துணைகளால் ஏற்படும் பிரச்னைகளும் அதனால் ஏற்படும் மன அழுத்தமுமே, பெரும்பாலான பெண்கள் போதை மருந்து எடுத்துக் கொள்வதற்கான காரணம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, தேசிய போதை பொருள் தடுப்பு அமைப்பு கூறியது.
------
ஆகக் கடைசி தகவல்படி நாட்டின் 25 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது!
அப்பகுதிகள் அனைத்தும், சரவாக், KL, Putrajaya, Negeri Sembilan, Johor, Melaka, Selangor ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை.
-----
இந்தியா, மத்திய பிரதேஷில் தனது 27 வயது மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் கோடரியால் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் 30 வயது கணவனைக் காவல் துறை கைது செய்துள்ளது!
ஓராண்டாக அத்தம்பதிக்கு இடையே வாக்குவாதம் நிகழ்ந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்த பெண் ஆறு மாதங்களுக்கு முன் தாம் வரதட்சனை கொடுமையை எதிர்நோக்குவதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.