
தற்போது நடைபெற்று வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில், இன்று காலை 9 மணி வரையிலான நிலவரப்படி, வாக்களிக்கத் தகுதியுள்ள 2.7 மில்லியன் வாக்காளர்களில், 8 விழுக்காட்டினர் வாக்களித்திருக்கின்றனர் !
தேர்தல் ஆணையம் அத்தகவலை வெளியிட்டுள்ளது.
வாக்களிப்பு மையத்துக்கு சீக்கிரமாகவே சென்று வாக்களிக்கும்படி, அவ்வாணையம் ஜொகூர்வாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள 56 தொகுதிகளில் பலமுனை போட்டி நிலவி வருகின்றது.
அதில், 172 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.
இதனிடையே, ஜொகூர் தேர்தல் முடிவுகளை, இன்றிரவு 8 மணி தொடங்கி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ராகாவில் கேட்கலாம்; Astro Audio செய்திகள் சமூக ஊடகங்களையும் வலம் வரலாம்.
----------
இதனிடையே, ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் காலத்தில், போலிச் செய்திகள் பரப்புதல், வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் மோசடி தொடர்பில், 29 புகார்களை, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் பெற்றுள்ளது !
இன்று காலை வாக்களித்த, தொடர்புத் துறை துணை அமைச்சர் Teo Nie Ching, அதனை கூறினார்.
அம்மாநில சட்டமன்றம் ஜூன் 1-ஆம் தேதி கலைக்கப்பட்டதிலிருந்து, இம்மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார காலம் வரை, இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
---------
மலாக்காவில் பள்ளியொன்றில், சிறிய கத்தியுடன் சக மாணவர்களை துரத்தியதாகக் கூறப்படும் மாணவரின் தந்தை, தனது மகன் பள்ளியில் பகடிவதைக்கு ஆளானதாகக் கூறி காவல்துறையிடம் புகார் செய்துள்ளார் !
அப்புகாரைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அம்மாணவன் மீது, பனிக்கட்டிகள் மீண்டும் மீண்டும் வீசப்பட்டு, தொடர்ந்து பகடிவதை செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்து, அவன் அவ்வாறு நடந்துகொண்டதாக, முன்னதாக செய்திகளும் வெளிவந்தன.
----------
சிலாங்கூர் ஷா அலாமில், 14 வயதான 2 இளைஞர்களுக்கு எதிராக, இயற்கைக்கு புறம்பான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், தனியார் கல்லூரி ஊழியர் ஒருவர், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் !
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு பிரம்படிகளுடன் கூடிய, அதிகபட்ச 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
--------
Pahang-Terengganu இடையிலான சாலையில், அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குழுவும், ஒரு காரும் விபத்தில் சிக்கியதில், நான்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்த வேளை, குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர் !
---------
சிலாங்கூர், ஜொகூர், மலாக்கா உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பிற்பகல் 1 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !