மலேசியா தற்போது கோவிட் 19 தொற்றின் புதிய தினசரி நேர்வுகளின் அதிகரிப்பை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அதிக தொற்று மற்றும் இறப்பு விகிதங்களைத் தூண்டும் திறன் கொண்ட கொரோனா வைரஸின் மிகவும் கொடூரமான மாறுபாடுகளுடன் (வேரியண்ட்) ‘போராட’ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அறிமுகமான நாளிலிருந்தே சுவாசக் கவசம் அணிவதன் அவசியத்தைச் சுகாதார அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், எந்தச் சுவாசக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில் தற்போது ‘ஒரு சுவாசக் கவசம்’ இன்றி ‘இரண்டு சுவாசக் கவசங்கள்’ அணிவதுதான் பாதுகாப்பனது என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தனது ஆய்வின் மூலமாக கூறியுள்ளது. கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இரட்டை சுவாசக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
சுவாசக் கவசம்
காற்றில் உள்ள நீர்த்திவலைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் சுவாசக் கவசங்களில் பல வகைகள் உள்ளன. கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சர்ஜிக்கல் சுவாசக் கவசம், துணி சுவாசக் கவசம் மற்றும் என்95 சுவாசக் கவசங்களை அணியலாம். சுவாசக் கவசம் சுவாசிப்பதற்கு இடையூறு இல்லாதவாறு அதே நேரத்தில் சற்று இறுக்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூக்குப் பகுதியில் இறுக்கமாகவும், வாய் பகுதிக்கு அருகே சற்று தளர்வாகவும், பின்னர் தாடை பகுதியில் இறுக்கமாகவும் இருக்க வேண்டும்.
இரட்டை சுவாசக் கவசம்
இரட்டை சுவாசக் கவசத்திற்கு ஒரு சர்ஜிக்கல் சுவாசக் கவசத்தையும் ஒரு துணி சுவாசக் கவசத்தையும் பயன்படுத்த வேண்டும்.

முதலில் சர்ஜிக்கல் சுவாசக் கவசத்தையும், அதன்மேலாக ஒரு துணி சுவாசக் கவசத்தையும் அணிய வேண்டும். என்95 சுவாசக் கவசம் அணிந்தால் வேறு சுவாசக் கவசத்தை அணியத் தேவையில்லை. இரண்டு சர்ஜிக்கல் சுவாசக் கவசத்தையோ, இரண்டு துணி சுவாசக் கவசத்தையோ ஒன்றாக பயன்படுத்தக் கூடாது.
கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்! வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்!