Skip to main content

Advertisement

Entertainment

நட்பு எனும் உன்னத உறவு

நாடு, இனம், பால், மொழி, மதம், வசதி, வாய்ப்புகள் என எல்லாம் கடந்த ஓர் உன்னத உறவு நட்பு. எங்கோ பிறந்த இருவர் வாழ்க்கையின் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அவர்களுக்கிடையே நட்பு பிறக்கிறது. சிறு வயதில் நண்பர்களாய் ஆனவர்கள் இறுதிக்காலம் வரை நண்பர்களாய்த் தொடர்வதும் உண்டு, பள்ளிப்பருவத்தோடு முடிந்து விடும் நட்பும் உண்டு. பல நாட்களாய், வருடங்களாய் பிரிந்திருந்து எந்த மற்றமும் இன்றி மீண்டும் இணையும் நட்பும் உண்டு.

நட்பு எனும் உன்னத உறவு

Advertisement

உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பார்கள். நம்முடைய குணநலன்கள், நடத்தை போன்ற அம்சங்களை நிர்ணயிக்க முக்கிய காரணமாக இருப்பது நாம் தேர்ந்தெடுக்கும் நட்பு. நல்ல மனைவியைப் போல் நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்!

எந்த ஓர் உறவுக்கும் உண்மையும், நேர்மையும் அடித்தளம். நல்ல நண்பன் நாம் தவறான வழியில் செல்லும் போது நம்மை திருத்தி வழிகாடுபவராகவும், சரியான வழியில் செல்லும் போது நம்மைத் தட்டிக் கொடுப்பவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உண்மையை உங்களுக்காக நேர்மையாக எடுத்துக் கூறுபவராக இருப்பார்.

நட்பு எனும் உன்னத உறவு

“நட்பில்லா மனிதன் என்றால் அவனொரு மனிதன் இல்லை. நட்புக்கே உயிரைத் தந்தால் அவனைப் போல் புனிதன் இல்லை”. இதுவொரு பாடல் வரியாகும். நட்பு என்பது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்வதோடு தக்க சமயத்தில் உதவி புரிவதாகும். “தோள் கொடுக்க தோழன் உண்டு” என்ற நம்பிக்கைதானே நட்பு? அதற்காக, தேர்வு எழுதும் போது நண்பன் பதில் தெரியாமல் ஆபத்தில் இருக்கிறான் என விடைத்தாளைத் தூக்கிக்கொடுத்து நட்பை நிலை நாட்ட எண்ணி விடாதீர்கள்!

முகம் மட்டும் மலர நட்பு கொள்வது நட்பாகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பு கொள்வது உண்மையான நட்பாகும். இதை தான் திருவள்ளுவர் தன்னுடைய 786வது குறளில் இவ்வாறு கூறுகிறார்…

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

Related Article

RAAGA Aaha Siranta Isai!