ஆண்களைக் கொண்டாட ஒரு தினம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் – ஆம்! நிச்சயமாக உண்டு. உலகிலுள்ள ஆண்களை கௌரவப்படுத்துவதற்காக, அவர்களின் உரிமையை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு வழங்க உருவாக்கப்பட்டது தான் ‘சர்வதேச ஆண்கள் தினம்’. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு கருவியாக அமைகிறது.

1999ஆம் ஆண்டு மேற்கத்திய தீவுகளில் தான் ‘உலக ஆண்கள் தினம்’ முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது. இது ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமாகும். இவ்வாண்டு “ஆண்கள் மற்றும் சிறுவர்களின் உடல்நலன் மேம்பாடு” என்ற கொள்கையின் அடிப்படையில் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
Advertisement
பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சமூகம் ஆண்களின் உணர்வுகளைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம். ஆண் என்பவன் வீரமானவனாகவும், மன உறுதி உடையவனாகவும், தலைமைப் பண்பு மிக்கவனாகவும் சோதனைகள் மிகுந்த போதும் மனம் கலங்காதவனாக மட்டுமே இந்தச் சமூகம் பார்த்து இருக்கின்றது. ஆனால், ஆண்களும் சில நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாவதுண்டு, அவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு. இருந்தும், பல வேலைகளில் ஆண்கள் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் கடந்து வருகின்றனர்.

ஸ்காட்லாந்தில் சமாரியர்களுக்கான ஓர் ஆய்வில், மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கால் 42% ஆண்கள் மன நல ஆரோக்கியத்துடன் போராடியதாக கண்டறியப்பட்டுள்ளது. தனிமை, பதற்றம், நிதி கவலை மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்திருத்தல் ஆகியவற்றை அவர்களின் முக்கிய கவலைகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் ஆண்களின் பங்களிப்பை போற்றும் வகையிலும், அவர்களின் மன அழுத்தம், ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்தும் விடுபடவும் அவர்களுக்கு என்றும் துணையிருப்போம். குடும்பத்திற்காக தன்னை உருக்கி, எரியும் மெழுகுவர்த்திகளாக ஒளி தரும் ஆண்களைப் போற்றுவோம்.

பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக தாயுமானவனாக, பெற்றோருக்கு நல்ல மகனாக, மனைவிக்கு அன்பான கணவராய், சகோதரிகளுக்கு பாசமான சகோதரனாய், தோழிக்கு நல்ல தோழனாக இருக்கும் ஆண்களை எந்நாளும் கொண்டாடுவோம்!