வீட்டிலேயே இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், தனிமைக் காலத்தைப் பயனுள்ள வழியில் செலவிட வாசிப்பு உதவுகிறது. குறிப்பாக, இலக்கிய வாசிப்பி ஒரு மனிதனை உள்ளும் புறமுமாக பாதிக்கிறது, அவனை கனியவும், பண்படவும், அவன் தனது ஆழ்மனத்துடன் உரையாடவும் வைக்கிறது.
ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புத்தகங்களைச் சேமித்திருப்பார்கள். புதிதாக வாசிக்க நினைப்பவர்களுக்கு தமிழில் குறிப்பிடத்தக்க சில புத்தகங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
Advertisement

அம்மா வந்தாள்
அம்மா வந்தாள் நாவல் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியத்துவம் பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமன் தமிழுக்கு தந்த மிக அற்புதமான பொக்கிஷம். இது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது இதன் அடுத்த சிறப்பம்சம். உறவுகளின் உணர்ச்சி பிழம்பான நேரங்களை இந்தக் கதையின் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அனைவரும் கையெடுத்து வணங்கும் தாய்மை பற்றிய முற்றிலும் வேறோரு பரிமாணத்தை இந்தக் கதையில் நீங்கள் தரிசிக்க முடியும்.

ஒரு புளிய மரத்தின் கதை
தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. தற்கால எழுத்தாளர்களில் திரு. ஜெயமோகன் அவர்களின் ஆதர்ஷ எழுத்தாளர்களுள் இவர் மிக முக்கியமானவர். இந்த புளிய மரத்தின் கதை எனும் நாவல் ஒரு ஊரில் இருக்கும் ஓங்கி வளர்ந்த புளிய மரத்தின் அடியில் நடக்கும் பல மனித அரசியல்களை பல அதிகார சண்டைகள் பற்றி இக்கதை விளக்குகிறது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலியைப் போலவே வாழ்ந்து அழிந்த ஒரு மரத்தின் கதை இது.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு
இந்த நாவல்களுக்கு அறிமுகம் தேவையா என்ன. பெயரை கேட்ட உடனே வாங்கி படித்தாக வேண்டிய பொறுப்பை நமக்கு அளிக்கும் நாவல்கள். அமரர் கல்கியின் அற்புதமான வரலாற்று படைப்புகள். பொன்னியின் செல்வன் இப்போது ஒருவழியாக திரைப்படம் ஆக்கப்பட்டு வருகிறது. கடும் முயற்சிக்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார். இது நமது பூர்வாசிரம கதைகளை வரலாற்று நிகழ்வுகளை புனைந்து கூறப்பட்டது என்றாலும் நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறியவும் அதில் ஆச்சர்யப்பட்டு போகவும் ஆயிரம் விஷயங்கள் இந்த நாவல்களில் கொட்டி கிடக்கின்றன.

வெக்கை
இந்த நாவல் அசுரன் என்கிற பெயரில் படமாக்கப்பட்ட போதுதான் பெரும்பாலானவர் கைகளில் சென்று சேர்ந்தது என்று சொல்லலாம். எழுத்தாளர் பூமணி தான் எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஒரு நாவல் திரைக்கதையாக மாறும்போது ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. தனது நாவலில் இல்லாதவைகளை சினிமாவில் சந்திக்கும்போது எழுத்தாளருக்கு இப்படி ஒரு நிலை ஏற்படுவது இயல்புதான். ஏனெனில் இயக்குனர் வெற்றிமாறனே இதனை கூறி இருக்கிறார். “நாவல் படித்து விட்டு படம் பார்த்தால் அது யாருக்கும் பிடிக்காது” என்று. அடக்குமுறை செய்யப்பட்டவர்களின் மனக்குமுறல்களின் மொத்த வடிவம் இந்நாவல்.

கருவாச்சி காவியம்
புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை. புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல் – வைரமுத்து
மேற்கண்ட வார்த்தைகளை முன்னுரையில் கொண்டு தொடங்குகிறது இந்நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்த கதை இது. கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.

கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் சுஜாதாவின் நாவல். மனதை அதிர வைக்கும் சில சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த புத்தகம் கொலையுதிர் காலம்.
புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம் தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கின்ற நிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகைய அனுபவம் இருக்கும்.
